மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’ அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ’கோட்டை அமீர்’ விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.25,000-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. குடியரசு தின விழாவின் போது இந்த விருதினை முதல்வர் வழங்குவார்.
தகுதியானவரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ, https://awards.tn.gov.in இணைய தளம் மூலமாகவோ அல்லது அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு 15.12.2021-க்கு முன்பாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.