• Wed. Apr 24th, 2024

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா..?
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்..!

Byவிஷா

Feb 25, 2023

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செய்த சாதனைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயார், நீங்கள் தயாரா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, “திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு பணியை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி கொண்டும், அடிக்கல் நாட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார். நடக்கிறார். சைக்கிள் ஓட்டுகிறார். பளு தூக்குகிறார். இதை யார் உங்களிடம் கேட்டது? நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள்? திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு துன்பம், துயரம், வேதனை தவிர வேறு என்ன கிடைக்கிறது?
நாங்கள் செய்தது இவ்வளவு.. நீங்கள் செய்தது என்ன?
அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 81 கோடி ரூபாய் செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கொண்டு வந்தோம். 61 கோடி ரூபாயில் உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தோம். இது எல்லாம் அதிமுக சாதனை என்று நாங்கள் வாக்கு கேட்டு வருகிறோம். ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் 484 கோடி ரூபாயில் திட்டமிட்டு பணியை தொடங்கி வைத்து நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சியில் 22 மாதங்களில் ஒரு நன்மையை செய்திருக்கிறார்களா?

துணிவு இருக்கிறதா?
நாங்கள் 10 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்பதை கூறுகிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளீர்கள். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன நலத்திட்டங்களை செய்துள்ளீர்கள் என உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு தெம்பு, துணிவு, திராணி இருந்தால் பட்டியலிட்டு பேச தயாரா? இந்தியாவிலேயே நான்தான் சூப்பர் முதலமைச்சர் என்று தனக்குத் தானே பெருமையாக பேசி கொள்கிறீர்கள். இதைத் தவிர வேறு என்ன உங்களுக்கு தெரியும்?
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து வரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் என்று பல திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்திவிட்டது. மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு என்று இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது அமைச்சர்கள் உங்கள் வீடு தேடி வாக்கு கேட்க வரும்போது 22 மாதத்துக்கான 22,000 உரிமை தொகை மற்றும் கேஸ் மானியம் 100 என என்று 2200 என 24,400 கேட்டு வாங்குங்கள். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
குடும்பச் சூழலால் சிரமத்தில் உள்ள மக்களை ஆடுகளை ஓட்டுவது போல பட்டியில் அடைத்து கொடுமைப்படுத்துகிறீர்கள். நாட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தது இல்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. சந்தி சிரிக்கிறது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பது தான் இதற்கு காரணம். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. நீங்கள் பேசுவதற்கு தகுதி இல்லை. நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
ஒரே மேடையில் பேசலாமா? நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். என்னால் ஒரு பேப்பரை கூட பார்க்காமல் நாங்கள் செய்த திட்டங்களை பேச முடியும். எங்கள் பத்து ஆண்டு ஆட்சியை இருண்ட ஆட்சி என்கிறீர்கள். திமுகவின் 22 மாத ஆட்சி பேயாட்சியாக உள்ளது. விவசாயம், கல்வி, தொழில் என்று அனைத்திலும் சாதனை படைத்த அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *