விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள் ஆலோசனையின் பேரில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா எனவும் , தற்காலிகமாக பட்டாசு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, வருவாய் அலுவலர் நாகராஜன், விஜயரெங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன், ஆகியோர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாயில்பட்டி அருகே உள்ள துரைசாமிபுரத்தில் இருந்து சேதுராமலிங்கபுரம் செல்லும் மெயின் ரோட்டின் அருகிலுள்ள தகர செட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக வருவாய்த்துறையினர் தகர செட்டினை ஆய்வு செய்தனர். செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தகர செட்டில் முழுமையாக சோதனையிட்டபோது ரூபாய் ஒரு லட்சத்து நான்காயிரம் மதிப்புள்ள 52 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து அருகில் உள்ள அறையில் வைத்து மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி சீல் வைத்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கமல் தகர செட்டின் உரிமையாளர் சாத்தூர் தென்றல் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.





