• Thu. May 15th, 2025

சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

ByT.Vasanthkumar

May 2, 2025

பெரம்பலூரில் மே தினத்தை முன்னிட்டு சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் துவங்கிய பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் துவக்கி வைத்தார். தொழிலாளர்களுக்கான உரிமைகளை முழக்கமிட்டு சென்ற இந்த பேரணி முக்கிய வீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல முன்னாள் பொதுச்செயலாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- வழங்கிட வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்.
இரண்டாண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை உடனே பணிவரன் முறைப்படுத்தவும், மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவம், என்.சி.பி.எல் போன்ற திட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எடுத்துரைத்து பேசினார்.

நிகழ்வில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.