வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (டிச.23) காலை 8.30 மணியளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவியது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு (டிச.29 வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, இன்று (டிச.24) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.