• Fri. Mar 29th, 2024

ராதிகா எனக்கு அம்மா இல்லை ஆன்டி – வரலட்சுமி சரத்குமார் பளீச்..!

Byவிஷா

Jun 21, 2022

ராதிகா எனக்கு அம்மா இல்லை, அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி என வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரையில் சவாலான கேரக்டர்களை ஏற்று தைரியமாக நடித்து வரும் வரலட்சுமி, நிஜத்திலும் தைரியமான, வெளிப்படையான பெண்ணாக இருந்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ராதிகா மற்றும் சரத்குமாரின் மகளான ரேயன் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வரலட்சுமி, ரேயன் தைரியமான பெண். இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அவளுக்கு தெரியும்.
மக்கள் பல்வேறு விதமாக பேசி வருகிறார்கள். என்னையும் நீங்கள் ஏன் ராதிகாவை அம்மா என கூப்பிடவில்லை என கேள்வி கேட்கின்றனர். ராதிகா என் அம்மா இல்லை. அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி. நாங்கள் இருவரும் எங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம். இதனால் அவரை எனக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. எங்களுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது.
எல்லோருக்கும் ஒரே அம்மாதான் இருக்க முடியும். எனக்கும் ஒரே அம்மாதான். ராதிகாவை நான் ஆன்ட்டி என்றுதான் கூப்பிடுவேன். ஆனால் நான் இருவரையும் சமமாக மதிக்கிறேன். ரேயனுக்கும் எனக்கும் வேறு வேறு அப்பா. அவருடைய அம்மா என் அப்பாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், என் அப்பா அவரையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார். ரேயனின் திருமணத்தை என் அப்பாதான் நடத்தினார். மக்கள் தான் ஏதாவது தப்பா பேசிகிட்டே இருக்காங்க என்று கூறினார்.
வரலட்சுமி தற்போது தமிழில் காட்டேரி, பாம்பன், யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இது தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிவரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *