• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,

Byஜெ.துரை

Aug 15, 2026

80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 13-வது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இம்முறை சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டுத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல அடுக்கு பாதுகாப்புகளுடன் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து உரையாற்றிய பிரதமர், அவர்களின் கனவுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஊக்கம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் 140 கோடி இந்தியர்களின் சக்தியால் நாடு அனைத்துத் துறைகளிலும் புதிய உச்சங்களை எட்டி வருவதாகவும், வரும் காலங்களில் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.