மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சாத்தையாறு அணை அமைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மை காரணமாக சில மாதங்களாக அணை முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் சாத்தையாறு அணையில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதன் பேரில் வருவாய்த்துறையினர் அணையில் வண்டல் மண் அள்ள அனுமதி அளித்துள்ளனர். தற்போது பொக்லைன் இயந்திரம், டிராக்டர்கள் மூலம் அணையில் வண்டல் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய முறையில் வண்டல் மண் அள்ளப்படுகிறதா? விவசாயிகள் போர்வையில் மணல் மாஃபியாக்கள் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனரா? என்பதை வருவாய்த் துறையினர் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும், விதிமீறல்கள் இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





