• Fri. Apr 19th, 2024

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி!..

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வணிக வரிப் பணியாளர் சங்கம் முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன் தெரிவித்ததாவது, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வணிகவரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் வரி வருவாயைப் பெருக்கும் வகையில் வணிக வரித் துறையில் மனிதவளம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் 100 சுற்றும் குழு உருவாக்கப்படும். புதிதாக ஏழு நிர்வாகக் கோட்டங்களும், ஆறு நுண்ணறிவுப் பிரிவும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தார்கள்.

கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் அமைச்சரைச் சந்தித்த போது அறிவிப்பினை நடைமுறைப்படுத்த அனைத்து நிலைகளிலும் 1000 பேருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். தற்போது உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்களை துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அதற்கான ஊதியத்துடன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நிதி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வணிகவரித் துறை வரலாற்றில் 1000 பேருக்கு பதவி உயர்வு என்பது இதுதான் முதல் முறை. பதவி உயர்வு கானல் நீராய் இருந்த துறையில் பணியாளர்களின் கனவை நனவாக்கி காட்டிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்களுக்கும் வணிகவரித் துறையின் சார்பாகவும், பதவி உயர்வு பெற உள்ள ஊழியர்கள் சார்பாகவும், எங்களது சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிந்துக் கொள்கிறோம். இனி கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றி அரசின் வரி வருவாயைப் பெருக்க 100℅ அப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் துறையின் வளர்ச்சிக்கும், வருவாய் பெருக்கத்திற்கும் அதிகாரப் பகிர்வை பரவலாக்க, சமன் செய்ய துணை மாநில வரி அலுவலர் மற்றும் மாநில வரி அலுவலர் நிலையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *