வடமாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அவ்வகையில், பண்டல்கண்ட் மாவட்டம் மகோபாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகையில், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்றும், பிரச்சாரத்திற்காக ரூ.8000 கோடி மதிப்புள்ள விமானத்தில் பறக்கும் பிரதமருக்கு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதுடன், பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் மோடியும் தவறான விளம்பரம் செய்வதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியின்போது செய்த பல்வேறு பணிகளை மேற்கோள் காட்டிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய கட்சி என்றும் தெரிவித்தார்.