• Fri. Apr 19th, 2024

ஜெய் பீம் பட பாணியில் நரிக்குறவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்… வீடு திரும்பாத அவலம்.. மீட்டுத் தர கோரிக்கை

Byமதி

Dec 4, 2021

தஞ்சை மாவட்டத்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், 3 நாட்கள் ஆகியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர்.

வல்லம் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார், விஜயன், பரமசிவன் ஆகியோரை கடந்த ஒன்றாம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்போது, ராஜ்குமாரின் மனைவி ராணி மற்றும் விஜயன் மனைவி சரோஜா ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து ராணி, சரோஜாவை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற மூவரும் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வல்லம் காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, விஜயன் மற்றும் பரமசிவன் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும், ராஜ்குமாரை கைது செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *