• Mon. Apr 21st, 2025

பன்மொழி பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம்: கவிஞர் வைரமுத்து ட்வீட்!

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

தாய்மொழிகளின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்: அதில்,

ஒருவன் கற்கக்கூடிய
மொழிகளின் எண்ணிக்கை
எண்ணில் அடங்காது

ஆனால்,
தாய்மொழி என்பது
ஒன்றே ஒன்றுதான்.
அதுவும்
அமைக்கப்பட்டதல்ல;
உன் பிறப்பிலேயே
அமைந்தது

உன் மூளை
வார்க்கப்பட்டதும்
அறிவு வளைக்கப்பட்டதும்
தாய்மொழிக்குத்தான்

தாய்மொழிதான்
அறிவை ஏந்திவரும்
இலகு ஊடகம்

தாய்மொழியில் மட்டுமே
பயிற்சி உள்ளவர்கள்தாம்
உலகத்தின்
அழியாத இலக்கியங்களைப்
படைத்திருக்கிறார்கள்

பன்மொழி என்பது
பக்கபலம்;
தாய்மொழியே தக்கபலம்

உங்கள் தாய்மொழி வளர்க;
எங்கள் தாய்மொழி
தமிழ் வாழ்க!