சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90 ஆயிரம் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். புகழ் பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் வருகிற 14-ம் தேதி நடைபெறும். மேலும் 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ம் தேதி வரை தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அன்றைய நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது. சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகிறார்கள். இவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு அடிப்படையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இதனை தவிர்க்கும்படி ஐயப்ப பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.