பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது.
இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.
அந்தவகையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் ரூ.104.68, கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது. இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.74 ஆகவும் உச்சத்தில் இருந்தது.
கடந்த மாதம் 28-ந் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24-ந் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.