மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நாடு தழுவிய போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதனால் இன்று நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல் தொடங்கியது . நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி, கேரளா, டெல்லி, அரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசுகள் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. நாடு முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் மறியல் நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி- மீரட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தானது ஸ்தம்பித்துள்ளது. அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலை 11 மணிக்கு மாபெரும் பேரணியையும் விவசாயிகள் நடத்துகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதுமட்டுமில்லாமல், ஆந்திராவிலும் பேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டுள்ளது.