• Wed. Feb 12th, 2025

ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 10 பேரின் கதி?

ByIyamadurai

Jan 24, 2025

மகாராஷ்டிராவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் சிக்கிய 10 ஊழியர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே, “பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை 10.30 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்” என குறிப்பிட்டார்.

இந்த வெடி விபத்தின் போது எல்டிபி பிரிவில் இருந்த 14 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தீயணைப்புத்துயைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மீதமுள்ள 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்,

ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் சத்தம் 5 கி.மீ தூரம் கேட்டது என்றும், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழும்பியதை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “வெடிவிபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உயர் அதிகாரிகள் உள்ளனர். நாக்பூரிலிருந்து மீட்புக் குழுக்கள் விரைவில் வந்து சேரும். மருத்துவக் குழுக்களும் உதவத் தயாராக உள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த வெடிவிபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.