மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று சேர்ந்து இருக்கிறது?, அந்த திட்டங்கள் எப்படி பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது?, என்பதை எடுத்து சொல்வதற்காக புதிய முன்னெடுப்பு ஒன்றை பாஜக மகளிர் அணி முன்னெடுத்துள்ளது. இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு அங்கு இந்த இயக்கத்திற்கான முதல் செல்ஃபியை வானதி ஸ்ரீனிவாசன் எடுத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், “பெண் சிசுக் கொலையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது பெட்டி பச்சாவோ, பெட்டி பதாவோ, சிறிய அளவில் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்காக ‘எஸ்.எம்.இ மகிளா பிளஸ்’ என்கிற சிறப்புத் திட்டம், மகிளா இ- ஹாட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு நேரடி ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் இது. இந்தத் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது. இதுவும் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மத்திய அரசு கொடுத்து இருக்கிறது. அதன் மூலம் பயனடைந்த பெண்களை சந்திப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுடன் பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தரவு தள மேலாண்மை பிரிவு கௌசல்யா உதயகுமார் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்து சென்றனர்.