பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான எக்ஸ்போசர் விசிட் நிகழ்வு நடைபெற்றது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க இன்று பல்லடம் புரட்சித்தலைவி அம்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் (exposure visit) நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் அவிநாசி அருள்புரம் கணபதிபாளையம் உள்ளிட்ட 10 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின் எந்த கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் படிக்கலாம் என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரிக்கு வந்த பள்ளி மாணவர்களை வரவேற்று என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது எனவும் பாடப்பிரிவுகளில் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்கும் வகையில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். தமிழ்துறை, ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, வேதியியல் துறை, கணிதத்துறை, ஆடை வடிவமைப்பு துறை உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் துறை சார்ந்த கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் கல்லூரி முதல்வர் முனியன் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சிறப்பம்சங்கள், என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன, கல்லூரியில் சேர எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ் பாடப்பிரிவில் தமிழர்களின் வரலாற்று பொருட்களான ஹூக்கா,மண் விளக்கு,வட்டல்,நெசவுகுண்டு,மருந்து அரைப்பான்,நொண்டி ஓடு,வீரராசேந்திர சோழன் கல்வெட்டு கி.பி 12 ம் நூற்றாண்டு முதுமக்கள் தாழி போன்ற பொருட்கள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.