ஒலிம்பிக் உலகமே ஒன்று திரண்டு கொண்டாடும் திருவிழா. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. ஆனால் அதற்கான முயற்சி அவ்வப்போது மேற்கொள்வது உண்டு. இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால் தொடக்க விழாவை எங்கு நடத்துவீர்கள் என்று கேட்டால் நிச்சயம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி தான் கையை நீட்டுவேன். இந்தியாவில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இதை விட பொருத்தமான இடம் இருக்க முடியாது. தொடக்க விழா நடக்கும் ஸ்டேடியத்தில் தான் தடகள போட்டிகளும் நடைபெறும். அதற்கும் சரியான இடமாக இது இருக்கும்’ என அவர் கூறினார்.