• Thu. Apr 25th, 2024

பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்ய ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: அரசாங்க அலுவலக பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு தி.மு.க.வினர் சென்றுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பஸ்நிறுத்தம் அருகே தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கல்லூரிக்கு கனவுடன் செல்கிற மாணவ-மாணவிகளுக்கு ஒரு தந்தையாக, ஒரு சகோதரராக தி.மு.க. ஆட்சி விளங்குகிறது என்று மேடையில் பேசப்பட்டுக்கொண்டிருந்தபோது, 129-வது வட்ட தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தொல்லை கொடுத்த தி.மு.க.வினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
தி.மு.க.வினரின் இந்த அராஜக போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றம் செய்வோரை விடுவித்து விடுவது என்பது குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *