• Fri. Apr 26th, 2024

எதிர்க்கட்சி தலைவராகிறார் ஓ.பன்னீர்செல்வம்?… ஆளுநர் சந்திப்பின் அதிரடி பின்னணி!..

By

Aug 19, 2021

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து, வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேச்சு எழுந்தது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கு முடியும் நிலையில் திமுக அரசு வேண்டுமென்றே சயனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. என்னையும், அதிமுக பொறுப்பாளர்கள் சிலரையும் சேர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அரசு வேண்டுமென்றே அதிமுக தலைவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, அவதூறு செய்தியை பரப்ப பொய் வழக்கை ஜோடிக்கின்றனர். நாங்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. சோதனையை தாங்குவோம் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் கலைவாணர் அரங்க வளாகத்திலேயே அமர்ந்து அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஏற்கனவே திமுக – அதிமுக இடையிலான ரெய்டு விவகாரத்தில் தலையிட முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கைவிரித்துவிட்டதாக தெரிகிறது. கொடநாடு விவகாரம் தொடர்பாக நேற்று மீண்டும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க இபிஎஸ் நேரம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பாஜக தலைமை மறுத்ததாக கூறப்படுகிறது.

அதனையடுத்தே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக மீது புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர். ஆனால் ஆளுநரை சந்தித்த தன் பின்னணியில் மற்றொரு சம்பவம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. அதாவது கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை சிக்கவைப்பதில் திமுக குறியாக உள்ளதாம். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக தோல்விக்கு காரணமாக அதிமுக அமைச்சர்களை தான் ஸ்டாலின் டார்க்கெட் செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வரிசையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேர்க்கப்பட்டுள்ளாராம். எனவே பழனிசாமி மீது கட்டாயம் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்படும் முன்பே கட்சியின் பெயரைக் காப்பாற்றும் பொருட்டு ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கலாம் என எடப்பாடி ஆலோசித்ததாக தெரிகிறது. இதுகுறித்தும் ஆளுநர் மாளிகையில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *