அரசியல் நையாண்டிகள் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் நிகழ்வுகளை ஸ்கூப் வீடியோக்களாக வெளியிட்டதன் மூலம் பிரபலமானது ‘பரிதாபங்கள்’ யூ-டியூப் சேனல். இதன் மூலம் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த கூட்டணியில் உருவான வீடியோக்கள் டெம்ப்ளேட்டாகவும், அடிக்கடி டிரெண்டாவதும் வழக்கம். இந்நிலையில், கஜா புயல் தாக்கியபோது ’ஃபண்ட்மெலன்’ என்ற செயலி மூலம் நிதி திரட்டுவதாக அறிவித்திருந்தனர் கோபி – சுதாகர் ஜோடி. அதன் மூலம், கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, தமிழ் சினிமா இயக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு, நிதி திரட்டுவதன் மூலம் திரைப்படத்தை தயாரிக்க போவதாக கோபி – சுதாகர் அறிவித்திருந்தனர். அதன்படி, ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர்.
இதனிடையே ஃபண்ட்மெலன் செயலி மீது பல்வேறு மோசடி புகார்கள் கூகுள் இணையத்தில் பதிவாகி வருகின்றன. இந்த மோசடியில் கோபி – சுதாகருக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவை காரணம் காட்டி படம் பற்றி அப்டேட்டை கோபி, சுதாகர் டீம் வெளியிடாததும் சந்தேகத்தை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இதுகுறித்து பரிதாபங்கள் யூ-டியூப் சேனல் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் பணம் கொடுத்தவர்கள் கமெண்ட் செய்தாலும் அவை உடனடியாக டெலிட் செய்யப்படுவதாகவும் புகார்கள் வலுத்து வருகிறது.
ஆனால், கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில், அத்திரைப்படம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவராமல் இருந்தது. அதனை சுட்டிக்காட்டி, சில தரவுகளோடும், ஆதாரங்களோடும் ஜேசன் சாமுவேல் என்ற யூட்யூபர் தனது சேனலில் கோபி – சுதாகர் ஸ்காம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.