கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெறும்.
தற்போது கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாழகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
ஆனால் இந்த நெல்லை கொள்முதல் செய்யும் அரசு கொள்முதல் நிலையம் மிகவும் இட வசதி குறைந்த பகுதியில் உள்ளது.
மேலும் அனைத்து விவசாயிகளும் தாங்கள் அறுவடை செய்த நெல்லை முழுமையாக அரசுக்கு விற்பனை செய்ய முடியாமல் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் திருபத்திசாரம் , ஈசாந்திமங்கலம் , இறைச்சகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லையும் இங்கு கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 2500 மூட்டை நெல்யை வீதிகளில் கொட்டி அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் இப்பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் அரசு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.