துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பேசிய போது தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை காட்டவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்துவிட்டதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘தாய்மொழி என்னை விடாது. நான் தாய்மொழியை விடமாட்டேன். இந்தியை கற்றதால் தமிழை மறக்கவில்லை. ஆங்கிலம் பேசும் அளவுக்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. இந்தியை சரளமாக பேசமுடியவில்லை,’என்றுத் தெரிவித்தார்.
மேலும் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போரை மீறியும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்திய பொருளாதாரம் தான் முன்னோக்கிச் செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இது பிரதமர் மோடியின் முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றி என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நன்றாக மேலாண்மை செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் என்று தம்மை பொருளாதார நிபுணர்கள் பாராட்டுவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை காட்டவில்லை என்று திட்டவட்டமாக நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணம் தமிழகத்திற்கு வரவேண்டியது இன்னும் கொடுக்கப்படவில்லை என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் நிர்மலா கூறியுள்ளார்.