

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல் என அரசு அறிவித்துள்ளது!
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை என்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும். பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை என்றும் அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
