முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, முந்தைய தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலையில் உள்ள, இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நாள் கலைப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறப்புற காமராஜரின் பெருமைகளை எடுத்துணர்த்தும் வகையில் பேசியும், வாழ்த்தியும் நிகழ்த்திய உரைகள் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது. இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




