புதிய வகை பிஎப்.7 வகை கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
இதைதொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.