

இன்று நடைபெறுவதாக இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு வரும் செப்.19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை அறிவித்துள்ளது
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியானது.
அதனை தொடர்ந்து, 50 சதவீத அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50 சதவீத மாநில இடங்களுக்கும் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு, கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று உத்தரவிட்டது.இந்நிலையில், இன்று (செப்.-1ம் தேதி) நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நீட் முதுகலை கலந்தாய்வில் மேலும் கூடுதல் இருக்கைகளை சேர்ப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

