ஒசூரில் அரசுப்பள்ளி கட்டடத்தை மர்மநபர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் சீதாராம்நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி உள்ளது. துவக்கப்பள்ளியாக இருந்த இந்த அரசுப்பள்ளி பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக அருகில் புதிய கட்டிடத்திற்கு அரசுப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. இந்த அரசுப்பள்ளி கட்டத்தில் பள்ளியின் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பழைய பள்ளி கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தில் வந்த இருவர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதற்கு கட்டிடம் இருந்த இடத்தை வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களும், ஜேசிபி வண்டியில் வந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகநாட்சி ஆணையர் செந்தில்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், அரசுப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டனர். அதற்குள் ஜேசிபி உடன் மர்மநபர்கள் தப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், ஆசிரியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.