மதுரை திருமங்கலம் அருகே 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. முனீஸ்வரன் தலைமையில் மேற்பரப்பு கள ஆய்வு பணி நடந்து வரும் நிலையில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளன. வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று மடை அமைந்துள்ளது. இதில் முதல் மடை சுவற்றில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது மடையில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.
இக்கல்வெட்டில் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.
மூன்றாவது மடையில் வலது புற சுவரில் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் அதன் பொருள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.