தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இணைக்கும் பணிக்கு மேலும் 15 நாட்கள்கூடுதல் அவகாசம் கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.வீடு வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் ஒரே வீட்டில் 2 மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்க முதலில் தயக்கம் காட்டி வந்தனர்.ஆனால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தி இருந்தார்.
அதன்பிறகு தான் நிறைய பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஆர்வம் காட்டினார்கள். நேற்று வரை 1 கோடியே 40 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். .
இந்த நிலையில் இன்னும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசும்போது …:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தற்போது பொதுமக்கள் ஆர்வமாக ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். இன்னும் 2 நாள் கழித்து எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்து கணக்கிட உள்ளோம். அதன் பிறகு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கலந்து பேசி கால நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.