பெரம்பலூர் மாவட்டம் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியதை தொடர்ந்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி பெரம்பலூர் ஜே.கே.மஹாலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் பயனாளிகளுடன் அமர்ந்து கண்டுகளித்தார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 21.12.2023 வரை நகராட்சி பகுதிகளுக்கும், 27.12.2023 முதல் 30.12.2023 வரை பேரூராட்சி பகுதிகளுக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட பல்வேறு துறைசார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தாவது..,
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையில், நமது மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்து அண்டை மாநில முதலமைச்சர்களும் அந்த திட்டங்களை செயல்படுத்தும் வகையில் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராய் விளங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அன்றாடம் அணுகக்கூடிய அரசுத்துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தொடங்கி வைத்தார்கள். முதற்கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்து இன்று பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் 735 பயனாளிகளுக்கு ரூ.83,52,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மின்சார வாரியத்தின் மூலம் 169 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளும், ரூ.1.75லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.5.26 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், குறு-சிறு நடுத்தர தொழில் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 89,07,204 மதிப்பிலான சுயதொழில் தொடங்க கடனுதவிகளும், 203 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.45லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நலன் காக்கும் முதல்வராக, ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தும் முதல்வராக இருப்பதால்தான், மனுக்களை எடுத்துக் கொண்டு அரசுத்துறை அலுவலர்களை தேடிச்சென்ற காலத்தை மாற்றி, மக்களைத் தேடி அரசு இயந்திரம் சுழலும் வகையில் இதுபோன்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார். இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, சார் ஆட்சியர் சு.கோகுல் நகர்மன்றத் தலைவர் த அம்பிகா இராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), இராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), பேரூராட்சித் தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), ஜாஹிர் உசேன் (லெப்பைக்குடிக்காடு), வள்ளியம்மை (அரும்பாவூர்), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், டாக்டர் கருணாநிதி, நகர்மன்றத் துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியில் முதலிடம் பெற்று பார்வையற்ற மாணவி சாதனை
- ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட போது கம்பி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
- தனியார் பள்ளிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களை உசிலம்பட்டி ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு
- வெள்ளத்தடுப்பு பயிற்சிக்காக அரசு அதிகாரிகள் ஜப்பான் பயணம்
- குமரி கடல் இயல்பு நிலைக்கு வந்தது கண்காணிப்புடன் சுற்றுலா பயணிகள் அனுமதி