2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலை பள்ளியிலுள்ள அவரது சிலைக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசும்போது: பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறினார். அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. முறைக்கேடு தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்படஉள்ளதாகவும், இன்னும் 6 மாத காலத்திற்குள் பத்திரபதிவு மேலும் எளிமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.