காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில், ப.சிதம்பரத்திற்கும், நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபாச்சேத்தி அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சியினர் கருத்து கூறலாம் என ப.சிதம்பரம் தெரிவித்ததை தொடர்ந்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேல், இப்பகுதியில் கட்சி வளர்ச்சியடையவில்லை, கட்சி கூட்டம் நடத்தால் முறையான அழைப்பு விடுப்பது இல்லை என குற்றச்சாட்டினார். மேலும் கட்சி நிர்வாகிகள் சரியில்லை என்றும், புதிய நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் நீங்கள் பேசிவிட்டீர்கள் மற்றவர்கள் பேசட்டும், அமைதியாக உட்காருங்கள் எனக் கூறினார். இதற்கு பாண்டிவேல், 20 வருடமாக கட்சியில் இருக்கிறேன் கட்சிகாரனாக என்னை பேசக்கூடாது என எப்படி சொல்லலாம் எனக்கூறி ப.சிதம்பரத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இறங்கி வந்த ப.சிதம்பரம் பாண்டிவேலிடம், “நீங்க போய் மேடையில நான் உட்கார்ந்த நாற்காலியில் அமருங்கள், நான் இங்கேயே இருக்கின்றேன் என கோபமாக தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சருடன், கட்சி நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.