• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து.., 18 பேர் பலி, 750 பேர் காயம்…

தெற்கு ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 750 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பந்தர் அப்பாஸுக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜாய் துறைமுகத்தில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. வெடி விபத்தைத் தொடர்ந்து தீ பரவியது. இது, ஈரான் நாட்டின் மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் போக்குவரத்து துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கொள்கலன்களுக்குள் இருந்த இரசாயனப் பொருட்கள் வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, எரிபொருள் டேங்கர் வெடித்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகின்றன. வெடி விபத்தைத் தொடர்ந்து பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வெடி விபத்து நடந்த பகுதியில் கண்ணாடிக் கூடுகளும், மனித உடலின் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. ஈரான் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஷாஹித் ரஜாய் துறைமுகத்தில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட் எரிபொருள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.