• Sat. May 17th, 2025

மேதினம்… போராட்டமே உரிமையை வென்றெடுக்கும் சாவி!

இன்று மே தினம்…
முதலாளிகள் கண்களின் வழியாக இடும் கட்டளையை தன் முழு உடலாலும் செய்து முடிப்பதே தலைவிதி என்றிருந்த தொழிலாளிகள், ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து தங்களது உரிமைப் போராட்டத்தை வென்றெடுத்த தினம்!

பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை உடைக்க 1986ல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி தொழிற்சங்கங்கள் அமைத்து, தங்களது உரிமைகளை மீட்க முதலாளிகளுக்கு எதிராக போராடி பல உயிர்களைத் தியாகம் செய்து தனது விடாமுயற்சியால்..,
8 மணி நேரம் “வேலை”
8 மணி நேரம் “ஓய்வு” 8 மணி நேரம் “உறக்கம்”
என்கிற உயரிய கோட்பாட்டை தன் நிலைக்கு கொண்டு வந்து நிலை நிறுத்திய தினம் தான் மே1. இதைத்தான் தொழிலாளர் தினம் என்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் மே தினம் நூற்றாண்டினைக் கடந்துள்ள நிலையிலும், வேலை நேரத்தை அதிகரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான்… தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்தால்… உங்கள் நாட்டுக்கும், உங்கள் மாநிலத்துக்கும் தொழிற்சாலைகளை அமைத்து முதலீடு செய்வோம் என்று பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் இங்குள்ள பொருளாதார முதல்வாத அரசுகளுக்கு ஆசை காட்டுகின்றன.
மறந்துவிட முடியுமா… 2023 ஏப்ரல் 21 ஆம் தேதியை … மேதின நூற்றாண்டு விழாவுக்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருந்தது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளுக்கு 10 நாட்கள் முன்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கும் சட்டத்தை தாக்கல் செய்து திமுக அரசு நிறைவேற்றியது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்காக வரும் பன்னாட்டு கம்பெனியின் பண வலையில் விழுந்து, இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள் என திமுகவின் கூட்டணிக் கட்சிகளே அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுகவும் தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியது. தொழிற்சங்கத்தினரும் கடும் போராட்டக் களத்தில் இறங்கிட முடிவுசெய்தனர்.
இந்த நிலையில் சில நாட்களிலேயே அந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் முதல்வர்.
இதேபோல வேறு சில மாநிலங்களும் தொழிலாளர் சட்டத்தைத் திருத்தின. தொழிலாளர்களை வஞ்சித்தன.
மத்திய அரசுக்கும் கார்ப்பரேட்டுகளின் நெருக்கடி தொடர்கிறது. எனினும் கடந்த 2025 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில்,
“வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக உயர்த்துவதற்கான அத்தகைய திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் காரணம் தொழிலாளர்களின் ஒற்றுமையும் போராட்டமும்தான். இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்கட்டும்… தொழிலாளர்களின் உரிமைகளை யாரும் பறித்துவிட முடியாது என்ற நிலை தொடரட்டும்!
8 மணி நேரம் “வேலை”
8 மணி நேர “ஓய்வு”
8 மணி நேர “உறக்கம்”
இந்த மே தின நாளில் உறுதி பட மீண்டும் மீண்டும் போராடுவோம்.
அறிவையும், வியர்வையும், உடல் உழைப்பையும் அன்றிலிருந்து இன்றைய தினம் வரை தன்னையே அர்ப்பணித்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு.., தாழை நியூஸ் & மீடியா குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த மே தினம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்
.

“நன்றி”

தா.பாக்கியராஜ்
தலைமை செய்திஆசிரியர்/பதிப்பாசிரியர்
அரசியல் டுடே
தாழை நியூஸ் & மீடியா குழுமம்
தாழை என்டர்டைன்மெண்ட்