மதுரையில் போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் அரசு பேருந்து சக்கரத்தில் விழுந்து விபத்தில் பலியான சிசிடிவி காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது.
மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (42) போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் சின்ன உடைப்பு பகுதியில் நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டூவீலரில் சென்று கொண்டிருந்த போது மண்டேலா நகரிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி, கீழே விழுந்தது. அப்போது மண்டேலா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கரம் அவர் மீது ஏறியதில் ராஜசேகரன் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜசேகரனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜசேகரன் துடிதுடித்து பலியானார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.