வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். மாணவியை குத்திய பின்பு மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கத்தியால் குத்தியதாக சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.