நற்றிணைப் பாடல் 112:
விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: குறிஞ்சி
பொருள்;:
’வந்துவிடுவேன்’ என்று அவர் சொன்ன மழைக்காலம் வந்தும் அவர் திரும்பி வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள்.
’வந்துவிடுவேன்’ என்று அவர் சொன்ன மழைக்காலம் வந்துவிட்டது பார்த்தாயா, வந்துவிடுவார், என்று சொல்லி, தோழி தலைவியைத் திசை திருப்பி ஏமாற்றுகிறாள். பொழியும் மழைக்கு என்ன விருந்து தரப்போகிறோம். மலைச் சாரலில் வேங்கை அரும்பே இல்லாமல் பூத்துக் கிடக்கும். தேன் உண்ணும் வண்டுகள் (சுரும்பு) சுற்றிக்கொண்டு ஒலிக்கும். யானையைக் கொன்றுவிட்டு அரிமா (சிங்கம்) உரும்பாமல் சுற்றித் திரியும். இப்படிப்பட்ட பெருங்கல் நாட்டுக்கு அவன் தலைவன்.
அவன் திரும்பி வந்துகொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, மழைமேகம் கடலில் நீரை முகந்துகொண்டு வந்து, பெய்து, தாழ்ந்த நிலப்பரப்பெல்லாம் ஆழமாகும்படி அருவியாகிக் கொட்டுகிறது பார்த்தாயா. மலை கண்ணிமைப்பது போல மின்னிக்கொண்டு கொட்டுகிறது பார்த்தாயா. வானவில் போட்டுக்கொண்டு கொட்டுகிறது, பார்த்தாயா. அந்த மழைக்கு நாம் என்ன விருந்து தரலாம்