கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி வருகை. கனமழையால் பாதிக்கப்பட்ட, செண்பகராமன்புதூர் பகுதியில் நெல் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான ஏக்கர் நெல் பயிர்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின. இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் அளவில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வெள்ள சேதங்களை பார்வையிட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வருகை தந்தார். செண்பகராமன்புதூர் பகுதியில் சுமார் 200 ஏக்கர் நெல் விவசாயம் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளை நேரில் சந்தித்து நீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.