


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

சிவகாசியில் அதிமுக சார்பில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கிடா விருந்தோடு, கிரிக்கெட் விளையாடுவதற்குரிய உபகரணங்களுடன், டீசர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசி தொகுதிக்குட்பட்ட 200 கிராமங்களைச் சேர்ந்த 300 கிரிக்கெட் அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிரிக்கெட் மட்டை, பந்து, தலைக்கவசம், ஸ்டெம்ப் உள்ளிட்ட 15 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

பின்னர் 30 கிடாய்கள் வெட்டப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் கறி விருந்தினை முன்னால் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பரிமாறினார்.
கிரிக்கெட் வீரர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது :- எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை சிவகாசியிலிருந்து ஆரம்பிப்போம். விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது தமிழகம் எங்கும் வளரட்டும். இந்தியா முழுவதும் பரவட்டும். ஜாதி- மதமோதல் இல்லாத ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க இதுதான் சரியான சந்தர்ப்பம். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருப்பவர்கள் எந்த கட்சி, எந்த சமூகம், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என தெரியாது.
அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு இந்தியர்கள் என்ற உணர்வுடன் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதே உணர்வுடன் நாம் போராட வேண்டும். இந்தியர்கள் என்ற உணர்வோடு, மொழியில் தமிழர் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு போராட வேண்டும்.

விளையாட்டில் மட்டும்தான் அனைத்து சமூகமும் சேர்ந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு விளையாட்டாகும். என்றார். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் விளையாட்டு அணிகளுக்கு ரூபாய் 25- ஆயிரம் பெறுமான தரம் வாய்ந்த 14- பொருட்களடங்கிய பையுடன், 300- ரூபாய் மதிப்புள்ள டிஷர்ட் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கும் வழங்கப்பட்டன.
இதன் மொத்த மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி ரூபாய் ஆகும். விழாவில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் விளையாட்டு உபகரணங்களையும், டீசர்ட்களையும் பெறுவதற்கு ஆர்வமுடன் திரண்டனர். இதன் காரணமாக தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இரண்டரை மணி நேரம் சளைக்காமல் தன் கையால் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட சுமார் 5 ஆயிரம் பேருக்கு மட்டன் அசைவ உணவு கிடா விருந்தாக வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன். முன்னாள் யூனியன் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

