• Fri. Apr 26th, 2024

இயற்கையால் கூட அசைக்க முடியாத கேதார்நாத் கோயில்..!

Byகாயத்ரி

Mar 15, 2022

இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்த கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது. பெரும் வெள்ளத்தால் அந்த பகுதியே சிதைந்தாலும் கோயில் தன் கம்பீரத்தைக் கைவிடாமல் நிலைத்திருக்கிறது.

இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகவும் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச கேதார ஆலயங்களில் ஒன்றாகவும் உள்ளது. மேலும் இந்த கோயிலானது பல மகிமைகளைத் கொண்டுள்ளது. கேதர்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் மிகவும் பயங்கரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய ஆக்ரோஷமான இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தது. அந்த பேரழிவுகள் நிகழ்ந்த போதும் இந்த கோயிலில் ஒரு சிறிய விரிசல் கூட ஏற்படவில்லை என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களுக்கே கூட ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

கேதார்நாத் அமைந்தது எப்படி..?

மகாபாரதப் போரின் விளைவாக பாண்டவர்கள் தன் உறவினர்களையும் ஏராளமான உயிர்களையும் கொன்றதால் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள சிவ பெருமானைத் தேடி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் கேதார்நாத் பகுதியில் வந்தடைந்த போது அங்கு ஒரு பெரிய அளவிலான காளை எருமையைக் கண்டார்கள். அந்த எருமையானது பீமனுடன் சண்டையிட்டது. அச்சண்டையில் பீமன் அந்த எருமையின் வாலைப் பிடித்து இழுத்து சண்டையிட்ட போது அந்த எருமை இரண்டாக பிரிந்தது. பிரிந்த எருமையின் முன் பகுதியானது நேபாளத்தில் உள்ள சிபாடோல் என்னும் பகுதியில் விழுந்தது அந்த பகுதி தற்போது டோலேஷ்வர் மகாதேவ் கோயிலாக உள்ளது. அந்த எருமையின் பின்பகுதி விழுந்த இடம் கேதார் பகுதியாகும் அதுவே தற்போது கேதரேஸ்வரர் ஆலயமாக மாறியுள்ளது. அந்த சண்டையின் இறுதியில் கேதார்நாத் பகுதியில் சிவபெருமான் ஒரு முக்கோண வடிவ லிங்கமாக பாண்டவர்களின் முன்பு தோன்றினார். அப்போது பீமன், தாம் சிவனுடன் சண்டையிட்டோம் என்பதை உணர்ந்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டவர்களின் பாவத்தைப் போக்கிய சிவபெருமான் கேதரேஸ்வரராக பாண்டவர்களிடம் என்னுடைய பக்தர்கள் இங்கு பக்தியோடு வந்து தரிசனம் செய்தால் என் அருளைப் பெறுவார்கள் என்று கூறி மறைந்தார்.

கேதார்நாத் கோயிலின் அமைப்பு

தரையிலிருந்து ஆறு அடி உயர மேடையில் இந்த கோயிலானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் சுமார் 85 அடி உயரமும் 187 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது. கோயிலின் சுவர்கள் 12 அடி தடிமன் கொண்டவையாகவும் வலுவான கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் கர்ப்பக்கிரகமும் ஒரு மண்டபமும் உள்ளன. மேலும் முன்புறத்தில் நந்தி சிலை அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியானது செங்குத்தான பாறைகள் நிறைந்ததாகவும் மற்றும் பனிப்பாறைகள் சூழப்பட்டதாகவும் உள்ளது. ஆதிசங்கரர் இந்த கேதார்நாத்தில் தான் மகா சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கோயில் வளாகத்தின் பின்னால் அவருடைய சமாதிக்கு ஒரு சன்னதியும் உள்ளது.

பாண்டவர்களால் அமையபெற்ற இக்கோவில் இயற்கை பேரிடரையும் கூட தாங்கி வலுவாக நின்று பேசும் ஒரு அற்புதம் என்று தான் கூற வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *