கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று புதிதாக ஒரு ஓதுவாரை நியமிக்க நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவு திருமலை சிவா உய்ய கொண்டான் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.