விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளைச் சுட்டிக்காட்டி ஒன்றிய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடத்தி வருகின்ற ஆய்வின் காரணமாக ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காலவரையின்றி மூடிக் கிடப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழுக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது வருகிற 10-ம் தேதி திங்கட்கிழமை மாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரையும், முன்னதாக அன்றைய தினமே காலை மதுரை தொழிலக பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குனரையும் நேரில் சந்தித்து பட்டாசுத் தொழிற்சாலை ஆய்வில் தற்காலிகத் தடையாணை பிறப்பிக்கப்படும் போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் தொழிற்சாலையை திறக்கவும், அதேபோன்று பட்டாசுத் தொழிற்சாலைகளில் தேவையற்ற ஆய்வுகளைக் குறைக்கவும் வலியுறுத்தி கோரிக்கைகள் விடுத்து மனுக்கள் கொடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

தங்களது கோரிக்கையின் மீது தமிழக அரசு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்காமல் தீர்வு எட்டப்படவில்லை என்றால் வருகிற 12-ம் தேதி புதன்கிழமை முதல் பட்டாசுத் தொழிற்சாலைகளை மூடி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்






