• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சர்வதேச நண்பர்கள் தின வரலாறு..!

Byவிஷா

Jul 30, 2022

“கண்ணீர் வராமல் காக்கும் இமைகள்தான் உறவுகள் என்றால்,
அந்த இமைகளையும் கடந்து வரும் கண்ணீரைத் துடைக்கும் கரங்கள்தான் நட்பு” என்று சொல்வார்கள்.
நெருங்கிய உறவுகள் தாண்டி எவ்வளவு வயதானாலும் நாம் என்றென்றும் போற்றிப் பேணக்கூடிய பந்தம்தான் நட்பு. நண்பர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கம். நீண்ட நெடிய நம் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளில் நெருங்கிய நண்பர்கள் இல்லாமல் கடக்கவோ இல்லை கற்பனை செய்துமோ கூட பார்க்க முடியாது.
நண்பர்கள் இல்லாத வாழ்வில் சலிப்பே மிஞ்சும். இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், சுயமரியாதையை வலுப்படுத்தவும், வாழ்க்கையை கொண்டாட்டமானதாக்கவும் என எல்லாமாகவும் எல்லாவற்றுக்கும் நட்பே உதவுகிறது.
இந்த நட்பைக் கொண்டாடும் வகையில் சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக்கும் நண்பர்களை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நாள், புதிய நபர்களைச் சந்திக்கவும் பிரிந்து போன நண்பர்களை கண்டடையவும்கூட வழிவகுக்கிறது.


நண்பர்கள் தினம் முதன்முதலில் 1930ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. முதல் உலகப் போர் விளைவுகளின் மோசமான அழிவுகளை கடக்க நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. சமூகத்தை வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த முயற்சியாக இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டது. உலக அளவில் ஒற்றுமை மற்றும் நட்புறவு உறவுகளை வலுப்படுத்துவதற்காக நட்பு தின கொண்டாட்டங்கள் தொடங்கி இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

இனம், மொழி, கலாசாரம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மக்களிடையே உள்ள இடைவெளிகளைக் குறைக்க வழிவகுக்கும் இந்த நாளை வாழ்த்து அட்டைகள் தொடங்கி, சமூக வலைதளங்கள், மெசெஞ்சர்கள் அனைத்திலும் வாழ்த்துகளைப் பகிர்ந்து மக்கள் அழகாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.