

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லாவிற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ் சியம் ஆகியோர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.தனசேகரன் நேற்று விசாரித்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை உறுதிசெய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜவாஹிருல்லா,ஹைதர்அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோரின் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

