வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 28) ஓரிரு இடங்களிலும், வரும் 29, 30-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வரும் 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29, 30-ம் தேதிகளில் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 26 செ.மீ., எமரால்டில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், தேனி மாவட்டம் தேக்கடியில் 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட் வொர்த் எஸ்டேட், தேனி வட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் 10 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
