
நாகை மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் உள்ளது.
வாஸ்துக்கு பெயர் பெற்ற ஸ்தலமும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவிலின் மஹாகும்பாபிஷேக விழா வரும் 5,ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கின்னஸ் சாதனையாக சிவன் ஒப்பனையில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிவதாண்டவ நாட்டிய விழா இன்று திருப்புகலூர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் ஜெயஸ்ரீ வர்ணாலய நாட்டிய பள்ளி சார்பில் நடைபெற்ற கின்னஸ் சாதனை சிவதாண்டவ நாட்டிய நடன நிகழ்ச்சியை வேளாக்குறிச்சி ஆதீனம் 18,வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை கோவை திருச்சி தஞ்சை மயிலாடுதுறை கும்பகோணம் நாகை திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுமார் அரை மணி நேரம் இடைவிடாது சிவதாண்டவ நடனமாடி அசத்தினர்.

பின்னர் நடனம் ஆடிய 300 மாணவ மாணவிகளுக்கு ஜெயஸ்ரீ வர்ணாலய நாட்டிய பள்ளி சார்பில் சிவ நிருத்திய ஜோதி சான்றிதழும் அதேபோல் குருமார்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 300 மாணவ மாணவிகள் சிவ தாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருப்பதாக அதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
