கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திருவள்ளுவர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கான கருவி மட்டுமல்லாது சமூக மாற்றத்திற்கும் மனிதநேய வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றார். உலகளாவிய போட்டி நிறைந்த சூழலில் தொழில்நுட்ப அறிவுடன் ஒழுக்கம், நேர்மை, சமூக பொறுப்பு ஆகிய பண்புகளும் மாணவர்களிடம் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே உண்மையான வளர்ச்சி என தெரிவித்தார். மாணவர்கள் தங்களது திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி. வாசுகி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்புரை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.





