தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை ஆளுநர் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
ஆறு நாள் பயணமாக தமிழக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். பிரதமர் உடனான சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லி சென்றபோது உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோரை தமிழக ஆளுநர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.